கோலாலம்பூர், ஜூலை 31- இங்குள்ள பஸாரியா வாங்சா மாஜூவில் (ஆப்டவுன் டானாவ் கோத்தா) இன்று காலை ஏற்பட்ட தீ விபத்தில் மொத்தம் எட்டு கடைகள சேதமடைந்தன.
இந்த தீவிபத்து தொடர்பில் காலை 7.02 மணிக்கு தாங்கள் அழைப்பை பெற்றதாக கோலாலம்பூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் நடவடிக்கை மையம் அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.
வங்சா மாஜூ தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திலிருந்து தீயணைப்புக் குழு ஸ்தாப்பாக் தீயணைப்பு நிலைய உறுப்பினர்களின் துணையுடன் இரண்டு வண்டிகளில் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக நடவடிக்கை கமாண்டர் எம். லெட்சுமணன் கூறினார்.
சம்பவ இடத்தை அடைந்த தீயணைப்புப் படையினர் பஸாரியா வங்சா மாஜூவில் உள்ள எட்டு கடைகள் தீயில் 100 விழுக்காடு அழிந்து போனதைக் கண்டனர் என்று அவர் குறிப்பிட்டார்.
தீயை அணைக்கும் முயற்சியில் 14 உறுப்பினர்களும் தீவிரமாக ஈடுபட்டனர். சில நிமிடங்களுக்குப் பிறகு தீ வெற்றிகரமாக கட்டுப்படுத்தப்பட்டது என்று அவர் கூறினார்.
இந்த சம்பவத்தில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை எனக் கூறிய அவர், தீ விபத்துக்கான காரணம் தடயவியல் பிரிவினரால் ஆராயப்பட்டு வருகிறது என்றார்.