கோலாலம்பூர், ஆக5 – பாலஸ்தீன விவகாரங்கள் தொடர்பான உள்ளடக்கம் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் சமூக ஊடக தளங்களிலிருந்து அகற்றப்பட்டது குறித்து விளக்கமளிக்க வருமாறு மேட்டா பிரதிநிதிகளை பிரதமர் துறை பணித்துள்ளது.
ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியேவின் படுகொலை பற்றிய உள்ளடக்கம் அன்வாரின் முகநூல் மற்றும் இண்ட்ஸ்டாகிராம் கணக்குகளில் இருந்து அகற்றப்பட்டு தடுக்கப்பட்டதும் இதில் அடங்கும் என வட்டாரங்கள் கூறின.
தனது பதிவுகளை நீக்கப்பட்டதால் அதிருப்தி அடைந்த பிரதமர், இது குறித்து மேட்டாவிடம் விளக்கம் கேட்டுள்ளதாக தெரிகிறது.
மேலும், 15,000க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்ட புக்கிட் ஜாலில் ஆக்ஸியாத்தா அரேனா அரங்கில் நேற்று நடைபெற்ற பாலஸ்தீன விடுதலைப் பேரணி தொடர்பான முகநூல் நேரடி ஒளிபரப்பின் போது ஏற்பட்ட இடையூறுகள் குறித்தும் இன்று பிற்பகல் நடைபெறவிருக்கும் அந்தக் கூட்டத்தில் விளக்கம் கோரப்படும்.
அன்வாரின் சமூக ஊடக தளங்களிலிருந்து பாலஸ்தீனம் தொடர்பான உள்ளடக்கங்கள் அகற்றப்பட்டது தொடர்பில் மேட்டா பிரதிநிதிகளுடன் இன்று புத்ராஜெயாவில் சந்திப்பு நடைபெறும் என்று தகவல் தொடர்பு அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சில் நேற்று கூறியிருந்
முன்னதாக, அந்த உள்ளடக்கம் அகற்றப்பட்டது குறித்து அரசாங்கத்தின் ஏமாற்றத்தை வெளிப்படுத்திய ஃபாஹ்மி, இது குறித்து மேட்டா விளக்கமளிக்க வேண்டும் எனக் கோரியிருந்தார்.
அன்வாரின் இண்ஸ்டாகிராம் கணக்கை சோதனையிட்டதில் ஹனியே படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து ஜூலை 31 அன்று அவர் வெளியிட்ட மூன்று பதிவுகள் மற்றும் ஹமாஸ் தலைவருடன் அவர் சந்தித்ததை காட்டும் புகைப்படங்கள் சமூக ஊடகத் தளத்தில் இருந்து நீக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.
அந்த பதிவுகள் அகற்றப்பட்ட அதேவேளையில் “ஆபத்தான தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள்” என்ற உள்ளடக்க எச்சரிக்கையும் வெளியிடப்பட்டிருந்தது.