கோல திரங்கானு, ஆக 7- கடலில் டீசல் விற்பனையில் ஈடுபடும் மீனவர்களின் மானியச் சலுகைத் தகுதி மீட்டுக் கொள்ளப்படும் என்று மலேசிய மீன் வள மேம்பாட்டு வாரியத்தின் தலைவர் முகமது ஃபாய்ஸ் ஃபாட்சில் எச்சரித்துள்ளார்.
மீனவர்களுக்கான டீசல் விநியோக மையங்கள் முறைகேடான நடவடிக்கைகளில் ஈடுபடுவது கண்டுபிடிக்கப்படும் பட்சத்தில் அந்த வளாங்களை மூடுவதற்கும் உத்தரவிடப்படும் என அவர் கூறினார்.
முறைகேடான நடவடிக்கைகளில் ஈடுபடும் மீனவர்களுக்கான டீசல் விற்பனை மையங்கள் உடனடியாக மூடப்படும். அதில் சம்பந்தப்பட்ட மீனவர்களின் உதவித் தொகை சலுகையும் மீட்டுக் கொள்ளப்படும் என அவர் சொன்னார்.
இருப்பினும், ஒரு சில தரப்பினர் பெரிதுபடுத்தியது போல் கடல் பகுதியில் டீசல் விற்பனை நடவடிக்கை பெரிய அளவில் மேற்கொள்ளப்படவில்லை என்பது நாங்கள் மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஆங்காங்கே ஒரு சில சம்பவங்கள் நிகழும் சாத்தியம் உள்ளது. மேலும், மீனவர்களின் நடவடிக்கைச் செலவினத்தில் பெரும் பகுதி அதாவது 60 விழுக்காடு டீசலுக்கே செலவிடப்படுகிறது என்று அவர் குறிப்பிட்டார்.
நேற்று இங்குள்ள செண்டேரிங் துறைமுகத்தில் மீனவர்களுடனான ரஹ்மா மெஸ்ரா மடாணி நிகழ்வில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
இவ்வாண்டில் சிலாங்கூர், கெடா உள்ளிட்ட மாநிலங்களில் மேலும் ஐந்து மீனவர் சில்லரைக் கடைகளைத் திறக்க மீன்வள மேம்பாட்டு வாரியம் திட்டமிட்டுள்ளதாகவும் முகமது ஃபாய்ஸ் கூறினார்.
தற்போது நாடு முழுவதும் பத்து மீனவர் சில்லரைக் கடைகள் உள்ளதாக கூறிய அவர், அவற்றில் நான்கு திரங்கானு மாநிலத்தில் செயல்படுகின்றன என்றார்.