SELANGOR

இரு வீடுகள் தீயில் சேதம்- மாற்றுத்திறனாளி முதியவர் உட்பட இருவருக்கு தீக்காயம்

ஷா ஆலம் ஆக 7- கிள்ளான், கம்போங் டேலேக் பாருவில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்தில் இரு வீடுகள் சேதமடைந்தன. இச்சம்பவத்தில் மாற்றுத்திறனாளி முதியவர் உள் பட இருவருக்கு தீக்காயம் ஏற்பட்டது.

இந்த சம்பவத்தில் எழுபது வயது மதிக்கத்தக்க மாற்றுத் திறனாளியான முதியவருக்கு இடது கையில் 20 விழுக்காடு தீக்காயம் ஏற்பட்ட வேளையில் 30 வயது மதிக்கத்தக்க மற்றொரு ஆடவருக்கு காலில் காயம் ஏற்பட்டது என்று சிலாங்கூர் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் நடவடிக்கைப் பிரிவு உதவி இயக்குநர் அகமது முக்லிஸ் மொக்தார் கூறினார்.

இத் தீ விபத்து தொடர்பில் இன்று காலை 7.54 மணியளவில் தகவல் கிடைத்ததை தொடர்ந்து மூன்று தீயணைப்பு வண்டிகள், ஒரு நீர் டாங்கி மற்றும் இரு அவசர சேவை வாகனங்களுடன் (இ.எம்.ஆர்.எஸ்.) 22 உறுப்பினர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக அவர் சொன்னார்.

சம்பவ இடத்தை அடைந்த போது தலா 600 சதுர அடி அளவிலான இரு வீடுகளில் தீ ஏற்பட்டதை தீயணைப்பு வீரர்கள் கண்டனர். தீ கட்டப் பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டப் பின்னர் முதலாவது வீட்டிற்கு 70 விழுக்காடும் இரண்டாவது வீட்டிற்கு 40 விழுக்காடும் சேதம் ஏற்பட்டிருந்தது கண்டறியப்பட்டது என அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

தீவிபத்தில் பாதிக்கப்பட்ட இருவரும் இ.எம்.ஆர்.எஸ். உறுப்பினர்களால் முதலுதவி வழங்கப்பட்டு தொடர் சிகிச்சைக்காக கிள்ளான் தெங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டனர் என்றார் அவர்.


Pengarang :