கோலாலம்பூர், ஆக. 12 – நாட்டின் விளையாட்டுத் திறனை மேம்படுத்த புதிய கட்டமைப்பை அரசாங்கம் உருவாக்கும் என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
அடைவு நிலையை அதிகரிப்பதற்காக அமைச்சு மற்றும் விளையாட்டு வீரர்கள் இணைந்து மேற்கொள்ளும் முயற்சி இதுவாகும் என்று அவர் சொன்னார்.
ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்ட எனது சகாக்கள் மற்றும் பிள்ளைகளுக்கு நான் வாழ்த்துக்களைத் தெரிவிக்க விரும்புகிறேன். ஏனென்றால் நாங்கள் எங்களால் முடிந்தவரை முயற்சித்தோம். நாங்கள் (அனைத்து) முடிவுகளை ஏற்றுக் கொள்கிறோம் என அவர் குறிப்பிட்டார்.
இறைவன் அருளால், நாட்டின் விளையாட்டின் சாதனைகளை மேம்படுத்த பல புதிய கட்டமைப்புகளை நாங்கள் உருவாக்க விருக்கிறோம். நாம் முன்னோக்கி கவனம் செலுத்த வேண்டும். அதே சமயம் நமது பிள்ளைகளும் விளையாட்டு வீரர்களும் தங்களால் முடிந்தவரை முயற்சித்ததால் அதனை குறை சொல்ல வேண்டாம் என்று அவர் கூறினார்.
இன்று கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில் மலேசிய வர்த்தகமய ஆண்டு உச்ச நிலை மாநாட்டை தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இவ்வாறு தெரிவித்தார்.