ஷா ஆலம், ஆக. 15 – இன்று சரவாக் மாநிலத்தில் நடைபெறும் 2024 மலேசிய விளையாட்டுப் போட்டியில் (சுக்மா) நெடுஞ்சாலை சைக்கிளோட்டம் மற்றும் டென்பின் போலிங் போட்டிகளில் இரண்டு தங்கப் பதக்கங்களை வெல்வதை சிலாங்கூர் இலக்காகக் கொண்டுள்ளது.
ஆடவர் குழு நெடுஞ்சாலை சைக்கிளோட்டப் போட்டி கூச்சிங்கில் உள்ள ஜாலான் துன் அடேனன் சாத்தேம் சாலையில் பிற்பகல் 1.00 மணிக்கு நடைபெறவுள்ளது.
அதே சமயம், நூர் நாய்ஸ் பாலில்னேசா பங்கேற்கும் பெண்கள் ஒற்றையர் டென்பின் போலிங் போட்டி இரவு 9.30 மணிக்கு நடைபெறும்.
நேற்று, தைஜிஜியன் போட்டியில் பெண் வூஷூ வீராங்கனையான மாண்டி செபெல்லே சென் மூலம் சிலாங்கூர் முதல் தங்கத்தை வென்றது.
சுக்மா 2024 போட்டியில் 37 விளையாட்டுகள் மூலம் 488 தங்கப் பதக்கங்களை வெல்லும் வாய்ப்பு விளையாட்டாளர்களுக்குக் காத்திருக்கிறது. ஈராண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்தப் போட்டியில் நாடு முழுவதிலுமிருந்து மொத்தம் 9,927 விளையாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர். இப்போட்டியில் புருணை சிறப்பு அழைப்புக் குழுவாகப் பங்கேற்றுள்ளது.