NATIONAL

யு.பி.எம். இணைப் வேந்தராக தெங்கு அமீர் நியமனம்- சிலாங்கூர் சுல்தான் அங்கீகாரம்

ஷா ஆலம், ஆக. 21- மேன்மைக்குரிய சிலாங்கூர் ராஜா மூடா தெங்கு
அமீரை மலேசிய புத்ரா பல்கலைக்கழகத்தின் (யு.பி.எம்.) இணை வேந்தராக
மறுபடியும் நியமனம் செய்ய மேன்மை தங்கிய சுல்தான் ஒப்புதல்
அளித்துள்ளார்.

இவ்வாண்டு அக்டோபர் மாதம் 18 தொடங்கி வரும் 2027 அக்டோபர் 17
வரை மூன்று ஆண்டுகளுக்கு அப்பல்கலைக்கழகத்தின் இணை வேந்தர்
பதவியை வகிக்க பட்டத்து இளவரசரான தெங்கு அமீருக்கு சுல்தான்
ஷராபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் அங்கீகாரம் வழங்கியுள்ளார்.

மற்றொரு இணை வேந்தரான நிறைநிலைப் பேராசிரியர் டத்தோ டாக்டர்
முகமது ஸோஹடி பார்டேலும் இப்பதவிக்கு மறு நியமனம்
செய்யப்பட்டுள்ளார்.

மேன்மை தங்கிய சுல்தான் கலந்து கொண்ட நிகழ்வொன்றில் முன்னாள்
எரிசக்தி, பசுமைத் தொழில்நுட்பம் மற்றும் நீர் வள அமைச்சர் டான்ஸ்ரீ
பீட்டர் சின் ஃபா கூய் புதிய இணை வேந்தராக நியமிக்கப்பட்டதாக
சிலாங்கூர் அரச பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்ட பதிவில்
குறிப்பிடப்பட்டுள்ளது.

இப்பதவிகளுக்கான நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வு நேற்று
இங்குள்ள இஸ்தானா கயாங்கானில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் உயர்
கல்வியமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜாம்ப்ரி அப்துல் காடீர், யு.பி.எம்.
துணை வேந்த டத்தோ பேராசிரியர் டாக்டர் அகமது ஃபர்ஹான் சடுல்லா
ஆகியோர் கலந்து கொண்டனர்.


Pengarang :