பெட்டாலிங் ஜெயா, மே 3:
கெஅடிலான் சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சித் தாவல் என்ற செய்தி சில தரப்பினரால் பரப்பி வரும் வீண் வதந்தியே ஆகும். மாநில சுற்றுலா, பயனீட்டாளர் நலன் மற்றும் சுற்றுச்சூழல் ஆட்சிக் குழு உறுப்பினர் எலிஸபத் வோங் கூறுகையில், இது வரை அனைத்து கெஅடிலான் சட்ட மன்ற உறுப்பினர்களும் மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலியின் நிர்வாகத்தை முழுமையாக ஆதரிக்கும் நிலையில் உறுதியாக இருக்கிறார்கள் என்றார்.
” ‘புளோக் புரோபகாண்டா’ இணையதளத்தில் வெளியிட்ட செய்தியில் நான்கு கெஅடிலான் சட்ட மன்ற உறுப்பினர்கள் கட்சித் தாவினார்கள் என்ற செய்தி வெறும் பொய்யான தகவலே. தகவல் வெளியாகியுள்ள இணையதளம் நம்பத்தகுந்த வட்டாரம் அல்ல,” என்று கூறினார்
” கெஅடிலான் சட்ட மன்ற உறுப்பினர்களின் நோக்கம் என்றும் மாறாது. நாங்கள் மந்திரி பெசார் நிர்வாகத்தை தொடர்ந்து ஆதரவு தரும் வேளையில் மக்களின் எதிர்ப்பார்ப்பை நிறைவேற்றுவோம்,” என்று கெஅடிலான் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
புக்கிட் லன்ஜான் சட்ட மன்ற உறுப்பினருமான வோங், கட்சியில் இருந்து விலகி புதிய கூட்டணி ஆட்சி அமைக்க இருப்பதாக வெளியான வதந்தியை முற்றிலும் மறுத்தார். மேலும் சிலாங்கூர் மாநில கெஅடிலான் தகவல் பிரிவு தலைவர் சுஹாய்மி ஷாபியி இந்த வீண் வதந்தி பொதுத் தேர்தலுக்கு முன் நடத்தப்படும் அரசியல் நாடகமே என்று விவரித்தார்.