கிள்ளான், ஜூலை 18:
ஸ்மார்ட் சிலாங்கூர் பேருந்து சேவையின் புதிய வழித்தடங்களை கிள்ளான் நகராண்மை கழகம் (எம்பிகே), கிள்ளான் நகரில் அறிமுகப்படுத்த உள்ளது என்று சிலாங்கூர் மாநில முதலீடு, சிறு மற்றும் நடுத்தர தொழில் மற்றும் வாணிப மற்றும் போக்குவரத்து ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ தேங் சாங் கிம் கூறினார். நான்கு பேருந்துகளோடு இயங்கும் இலவச சேவையான இது ரிம 1.25 மில்லியன் செலவில் தொடங்கியது குறிப்பிடத்தக்கது. இரண்டாவது வழித்தடங்களின் செலவீனங்களை மாநில அரசாங்கம் மற்றும் கிள்ளான் நகராண்மை கழகம் ஏற்றுக் கொள்ளும் என்று தேங் தெரிவித்தார்.
” இரண்டாவது ஸ்மார்ட் சிலாங்கூர் பேருந்து சேவையை (எம்பிகே02) அறிமுகம் செய்த சாதனை அனைவரின் ஒத்துழைப்பும் அடங்கி இருக்கிறது. இந்த வேளையில், அனைத்து கிள்ளான் வட்டாரத்தில் வாழும் மக்களும் இந்த இலவச சேவையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள இலவச பேருந்து சேவை மற்ற மாநிலங்களில் இல்லை,” என்று பெருமிதம் கொண்டார்.
இதற்கு முன்பு, டத்தோ தேங் புதிய ஸ்மார்ட் சிலாங்கூர் பேருந்து எம்பிகே02 வழித்தடங்களை அறிமுகப்படுத்தி வைத்து பேசினார். அவரோடு கிள்ளான் நகராண்மை கழகத்தின் தலைவர் டத்தோ யாஸிட் பீடின், பத்து தீகா சட்ட மன்ற உறுப்பினர் ரோஸ்ஸியா இஸ்மாயில் மற்றும் மேரு சட்ட மன்ற உறுப்பினர் டாக்டர் அப்துல் ரானி ஓஸ்மான் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கடந்த ஜூலை 7-இல் இருந்து ஆரம்பிக்கப் பட்ட எம்பிகே02 வழித்தடம் 12.3 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. கோங் ஹோ சீன ஆரம்பப்பள்ளியில் தொடங்கி, பத்து தீகா லாமா சாலை வழி கடந்து, கிள்ளான் உயர் நிலைப்பள்ளி மற்றும் மேரு சாலை வழியாக செல்லும். பள்ளி மாணவர்கள், முதியவர்கள் மற்றும் சாலை நெரிசலை தவிர்க்க பொது போக்குவரத்து சேவைகளை பயன்படுத்துவோர், ஸ்மார்ட் சிலாங்கூர் பேருந்து சேவையை பயன்படுத்துமாறு கேட்டுக் கொண்டார். கடந்த ஜூன் 30 வரை, கிள்ளான் நகராண்மை கழகம் 1.03 மில்லியன் பயணிகள் ஸ்மார்ட் சிலாங்கூர் பேருந்து சேவையை பயன்படுத்தியதாக கோடிட்டு காட்டுகிறது.