காஜாங், ஆகஸ்ட் 5:
சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் ஸ்மார்ட் சிலாங்கூர் பேருந்து இலவச சேவை, சிறந்த நிதிநிலை மற்றும் நாணயமான நிர்வாகத்தை கொண்டுள்ள மாநில அரசாங்கம் மட்டுமே கொடுக்க முடியும் என்று மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி கூறினார். இந்த நடைமுறை மலேசியாவில் உள்ள மற்ற மாநிலங்கள் அனைத்தும் செயல் படுத்த தவறிவிட்டது அதிலும் குறிப்பாக மத்திய அரசாங்கம் இதுவரை இது போன்ற மக்களுக்கு பலன் தரும் திட்டங்களை செயல்படுத்தவில்லை என்று தெரிவித்தார்.
” மத்திய அரசாங்கம் சில சேவைகளை 50% கழிவு கொடுக்கிறது, அதுவும் ஒரு மாதத்திற்குள் மட்டுமே. ஆனால், பாக்காத்தான் ஆளும் சிலாங்கூர் மாநிலம் எப்போதும் இலவச பேருந்து சேவை வழங்கும். ஒரு மாநில அரசாங்கம், சிலாங்கூர் மாநில அரசாங்கத்தை பின்பற்றி ஐந்து பேருந்துகளை சேவைக்கு ஈடுபடுத்தியது, ஆனால் தோல்வி அடைந்தது,” என்று பண்டார் புத்ரா மக்கோத்தா சமூக மண்டபத்தின் அடிக்கல் நாட்டு விழாவின் போது பேசினார்.
மேலும் கூறுகையில், அடுத்து ஐந்து ஊராட்சி மன்றங்கள் இரண்டு புதிய வழித்தடங்களை பெறவிருக்கின்றன. ஷா ஆலம் மாநகராட்சி மன்றம், சுபாங் ஜெயா நகராண்மை கழகம், அம்பாங் ஜெயா நகராண்மை கழகம், காஜாங் நகராண்மை கழகம் மற்றும் செப்பாங் நகராண்மை கழகம் ஆகிய ஐந்து ஊராட்சி மன்றங்களே இரண்டு புதிய வழித்தடங்களோடு செயல்படவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கிள்ளான் நகராண்மை கழகத்தை தவிர ஒரு புதிய வழித்தடம் பெறவிருக்கும் ஊராட்சி மன்றங்கள்; செலாயாங் நகராண்மை கழகம், கோலா லங்காட் மாவட்ட மன்றம், உலு சிலாங்கூர் மாவட்ட மன்றம், சபாக் பெர்னாம் மாவட்ட மன்றம் மற்றும் கோலா சிலாங்கூர் மாவட்ட மன்றம் போன்றவை ஆகும்.
இதனிடையே எம்பிஎஸ்ஏ மற்றும் எம்பிஎஸ்பி தலா எட்டு புதிய பேருந்துகளை பெற்றுள்ளது. மேலும் எம்பிஏஜே (7), எம்பிஎஸ் (6), எம்பிஎஸ்ஜே, எம்பிகே மற்றும் எம்பிகேஜே ஆகிய ஊராட்சி மன்றங்கள் தலா நான்கு பேருந்துகள், எம்டிகெஎஸ் (2), மற்றும் எம்டிகெஎல், எம்டிஎச்எஸ், எம்டிஎஸ்பி தலா ஒரு பேருந்து கூடுதலாக பெற இருப்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்து வரும் செப்டம்பர் 24-இல், ஸ்மார்ட் சிலாங்கூர் பேருந்து சேவை மொத்தம் 100-ஐ அடைந்த நிலையில் மலேசியாவில் அதிகமாக இலவச பேருந்து சேவை வழங்கிய மாநிலமாக விளங்கும் என்று தெரிவித்தார். இது வரை இந்த இலவச சேவை மாநில அரசாங்கத்திற்கு ரிம 32 மில்லியன் செலவு ஏற்படுத்தி உள்ளது.
#கேஜிஎஸ்