கோலாலம்பூர், டிச.12-
2019ஆம் ஆண்டு முடிவுறும் தருவாயில் உள்ள நிலையில், இவ்வாண்டு ஊழல் கண்ணோட்ட குறியீட்டில் மலேசியாவின் அடைவு நிலை (சிபிஐ) குறித்து அறிய ஆவலாய் இருக்கிறது. ஏனெனில், ஊழலைத் துடைதொழிப்பதில் அரசாங்கம் மேற்கொண்டு வரும் பல்வேறு நடவடிக்கைகள் எத்தகையதொரு மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை இந்த குறியீட்டு அடைவுநிலை கொண்டு நாம் மதிப்பிடலாம்.
அனைத்துலக வெளிப்படத்தன்மை எனும் ஊழல் எதிர்ப்பு அமைப்பு 2019ஆம் ஆண்டின் சிபிஐ அறிக்கையை அடுத்த மாதம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2018ஆம் ஆண்டு இந்த ஆய்வில் உட்படுத்தப்பட்ட 180 நாடுகளின் பட்டியலில் மலேசியா ஒரு படி உயர்ந்து 61ஆவது இடத்தைப் பிடித்தது.
இவ்வேளையில், 2019ஆம் ஆண்டில் நாடு மேலும் 3 படிகள் உயரும் என்று குற்றவியல் நிபுணர் டத்தோஸ்ரீ அக்பர் சாத்தார் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தனது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வேட்கை கொண்டுள்ள பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் ஊழலைத் துடைத்தொழிப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளதே இந்த நம்பிக்கைக்கு காரணம் என்று அவர் சொன்னார்.
தனது இலக்கை அடைவதற்காக, ஊழலற்ற நாடாக மலேசியாவை உறுதி செய்ய அரசாங்கம் பல்வேறு கொள்கைகளையும் அமைப்புகளையும் தோற்றுவித்துள்ளதை அவர் சுட்டிக் காட்டினார்.