ஷா ஆலாம், ஏப்ரல் 10:
தேசிய முன்னணியின் தேர்தல் கொள்கை அறிக்கையில் மகளிர் மேம்பாடும் அங்கீகாரம் இடம் பெறாதது அக்கூட்டணி மகளிர் நலனில் கோட்டை விட்டுவிட்டதாகவும் அக்கறைக் கொள்ளவில்லை என்றும் சிலாங்கூர் மாநில கெ அடிலான் மகளிர் தலைவி ஹனிசா தல்ஹா தெரிவித்தார்.
தேசிய முன்னணியின் தேர்தல் கொள்கை அறிக்கை முழுமையாக இல்லை என்றும் மகளிர் மேம்பாடும் நலனும் அதில் விடுப்பட்டிருப்பதாகவும் அவர் சுட்டிக்காண்பித்தார்.
ஹராப்பான் கூட்டணியின் தேர்தல் கொள்கை அறிக்கையில் மகளிர் மேம்பாடும் சமூகநலனும் இடம் பெற்றுள்ளதையும் சுட்டிக்காண்பித்த அவர் மகளிர் விவகாரத்தில் ஹராப்பான் கூட்டணியின் வரையறைகள் விவேகமானதாக இருப்பதாகவும் கூறினார்.
தேசிய முன்னணியின் கொள்கையில் மகளிர் மேம்பாடு வரையறுக்கப்படாதது அவர்களின் அக்கறையின்மையையும் அலக்ட்சியத்தையும் மெய்பிக்கிறது என்றார்.ஆனால்,ஹராப்பான் கூட்டணி இல்லத்தரசிகளுக்கும் உதவிட தொழிலாளர் சேமநிதி மூலம் திட்டவரைவினை கொண்டுள்ளதை அவர் சுட்டிக்காண்பித்தார்.
தேசிய முன்னணி மகளிர் குறித்த விவகாரத்தில் ஆக்கப்பூர்வமான வரையறைகளை கொண்டிருக்கவில்லை.மேலும்,அவர்களின் தேர்தல் கொள்கை அறிக்கையில் மகளிர் மற்றும் தனித்து வாழும் தாயார்களின் நலன் துளியும் கவனத்தில் கொள்ளப்படவில்லை என்றார்.
மகளிர் விவகாரம் தேசிய முன்னணியின் தேர்தல் கொள்கையில் இடம் பெறாதது நாட்டின் ஒட்டுமொத்த மகளிருக்கும் அஃது ஏமாற்றத்தை அளித்ததோடு தேசிய முன்னணி மகளிர் அர்ப்பணிப்பையும் பங்களிப்பையும் புறக்கணித்து விட்டது என்றும் அவர் சாடினார்.