NATIONAL

புதிய அரசாங்கம் தேர்வு செய்யப்படும் வரை பராமரிப்பு அரசாக செயல்படுவோம்

ஷா ஆலாம், ஏப்ரல் 10:

புதிய அரசாங்கம் தேர்வு செய்யப்படும் வரை நாங்கள் தொடர்ந்து பராமரிப்பு அரசாக விளங்குவோம் என மந்திரி பெசார் டத்தோஸ்ரீ முகமட் அஸ்மின் அலி குறிப்பிட்டார்.

அரசு வரையறையில் கூறப்பட்டுள்ளது போல் தொடர்ந்து இடைகால மாநில அரசாக புதிய அரசாங்கம் தேர்வு செய்யப்படும் வரை செயல்படுவோம் என்றார்.

இது வழக்கமான செயல் முறையாக இருந்தாலும் தொடர்ந்து சிலாங்கூர் மாநிலத்தின் தனித்துவத்தை காப்பதில் பங்காற்றுவோம் என்றும் கூறினார்.மாநில சட்டமன்றம் கலைக்கப்பட்டதை அதிகாரப்பூர்வமாக செய்தியாளர் சந்திப்பில் கூறிய போது அவர் இதனை தெரிவித்தார்.

மக்களின் நம்பிக்கையும் ஆதரவும் ஒத்துழைப்பும் ஒரு மாநிலத்தின் வளர்ச்சிக்கும் மாநில அரசின் செயல்பாடுகளுக்கும் பெரும் பங்காற்றும் எனவும் கூறிய டத்தோஸ்ரீ அஸ்மின் அலி தாமும் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்களும் மாநில வளர்ச்சிக்கும் மக்களின் நலனுக்கும் இயன்றவரையிலான செயல்களை செய்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர் சிலாங்கூர் மாநில மக்களுக்கு நன்றியையும் பதிவு செய்துக் கொண்டார்.இனி சிறந்த ஒன்றை தேர்வு செய்யும் பொறுப்பு மக்களுடையது என்றார்.

சிலாங்கூர் வாழ் மக்கள் விவேகமானவர்கள்.அவர்கள் சிறந்தவற்றை தேர்வு செய்யும் ஆற்றல் மிக்கவர்கள் என்றும் கூறிய மந்திரி பெசார் மாநில வளர்ச்சிக்கும் மக்களின் நலனுக்கு பரிவு மிக்க அரசாங்கத்தை தேர்வு செய்வதில் அவர்கள் நன் நிலையில் முடிவெடுப்பர் என்றும் டத்தோஸ்ரீ அஸ்மின் அலி செய்தியாளர் முன்னிலையில் கூறினார்.


Pengarang :