NATIONAL

நஜிப் தலைமை போன்ற மோசமான அரசாங்கத்தை கண்டதில்லை!!

ஷா அலாம்,மே 02:

நாடு சுதந்திரம் அடைந்ததிலிருந்து இதுநாள் வரை நஜிப் தலைமையைப் போன்ற மிக மோசமான அரசாங்கத்தை தாம் கண்டதில்லை என முன்னாள் பிரதமர் துன் மகாதீர் கூறினார்.

நாட்டின் முன்னாள் தலைவர்கள் எல்லாம் நாட்டிற்காகவும் இனத்திற்கும் மதத்திற்காகவும் மக்களுக்காகவும், போராடிய வேளையில் நஜிப் பணத்திற்காகவும் சுயநலனுக்காக போராடிக்கொண்டிருக்கிறார் என துன் மகாதீர் சாடினார்.

மேலும்,1எம்டிபி உட்பட பல்வேறு ஊழல்வாதத்தினை தற்காக்கவும் நஜிப் தொடர்ந்து போராடி வருவதாகவும் நாட்டை தொடர்ந்து மோசமான நிலைக்கு கொண்டு செல்வதாகவும் நஜிப்பை சாடினார்.

தித்திவங்சா நாடாளுமன்றத் தொகுதியில் மகாதீர் உரையாற்றுகையில் இவ்வாறு கூறினார்.

கடந்த 2013ஆம் ஆண்டு முதல் 1 எம்டிபி விவகாரம் பெரும் ஐயத்தை எழுப்பி வரும் நிலையில் இதுவரை அதன் உண்மை மூடி மறைக்கப்படுகிறது என்றும் கூறிய மகாதீர் நஜிப் தலைமைத்துவம் நாட்டை அழிவிற்கு இட்டுச் செல்கிறது என்றார்.

லங்காவியில் ஒரு ஓட்டுக்கு வெ.1000 வழங்கப்படுவதாக தெரிய வந்திருப்பதாகவும் விவரித்த அவர் காசு கொடுத்தால் பெற்றுக் கொள்ளுங்கள்.அது மக்களுடையது.ஆனால்,மே 09இல் ஹராப்பான் கூட்டணிக்கு வாக்களியுங்கள் என்றார்.

ஹராப்பான் கூட்டணி மக்களுக்கானது.புதிய மலேசியாவை நோக்கி நாட்டின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தேசிய முன்னணியை புறக்கணியுங்கள் என நினைவுறுத்திய மகாதீர் ஹராப்பான் கூட்டணியே மக்களின் தேர்வாக இருக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.


Pengarang :