கோலா லம்பூர், அக்டோபர் 19:
பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் தனது 11-வது மலேசிய பெருந்திட்டத்தின் அரைத் தவணை ஆய்வறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த வேளையில், இறுதியாக இளைய தலைமுறையினருக்கு வேண்டுகோள் விடுத்தார். இளையோர், மலேசிய நாட்டின் போராட்டத்தை புரிந்து கொண்டு எதிர்காலத்தில் இதைத்தொடர்ந்து பேணிக் காக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
” இளையோர்கள் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. எனது வயதை எட்டிய பலர் இப்போது இல்லை. இந்த நாட்டின் எதிர்காலத்தை இளையோர் கையில்தான் ஒப்படைக்க முடியும். இளையோர்களே, எவ்வளவு அறிவை வளர்க்க முடியுமோ, பெற்றுக் கொள்ளுங்கள். மலேசிய நாட்டின் மேம்பாட்டில் அதை பயன்படுத்துங்கள். சமய சார்பான நம்பிக்கையை வளர்த்து கொள்ளுங்கள்,” என்று நாடாளுமன்றத்தில் தமது உரையில் இறுதியாக இவ்வாறு பேசினார்.