ஷா ஆலம், ஜன.16-
சாலையோரம் நிறுத்தி வைக்கப்படும் கன ரக வாகனங்களுக்கு எதிரான நடவடிக்கையின் செக்ஷன் யு12 சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பள்ளி பேருந்தையும் லாரி ஒன்றையும் ஷா ஆலம் மாநகர் மன்றம் இழுத்துச் சென்றது.
பொது மக்களைப் பாதிக்கும் வகையில் சாலையோரம், வீடமைப்பு பகுதிகள் மற்றும் சாலைப் பகுதிகளில் நிறுத்தி வைக்கப்படும் கன ரக வாகங்களை அடையாளம் காணவும் அவற்றின் நடவடிக்கையை ஒடுக்கவும் இந்த நடவடிக்கை அவ்வப்போது மேற்கொள்ளப்படும் என்று மன்றத்தின் நிறுவனம் மற்றும் பொதுமக்கள் தொடர்பு பிரிவின் தலைவர் ஷாரின் அகமட் தெரிவித்தார்.
வீடமைப்பு பகுதிகளில் வாகன நிறுத்துமிட பற்றாக்குறையை ஏற்படுத்துவதோடு பொது போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்துகின்றன. மேலும், சாலையோரத்தில் இவை நிறுத்தி வைக்கப்படுவதால் இதர வாகனங்களுக்கு இடையுறு ஏற்படுகின்றன என்றும் அவர் சொன்னார்.
இந்த நடவடிக்கைகளில் அமலாக்கப் பிரிவு பணியாளர்களுடன் அரச மலேசிய போலீஸ் படை, சாலைப் போக்குவரத்து துறை அதிகாரிகளும் ஈடுபடுத்தப்படுகின்றனர் என்றார் அவர்.
1987ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்து சட்டத்தின் கீழ் இந்த கன ரக வாகனங்கள் அப்புறப்படுத்தப்படும்.
தங்கள் வாகனங்களை அப்புறப்படுத்த மறுக்கும் வாகனமோட்டிகளுக்கு 2,300 வெள்ளி அபராதம் விதிக்கப்படுவதோடு அந்த வாகனங்கள் அங்கிருந்து இழுத்துச் செல்லப்படும். மேலும், அந்த கன ரக வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படும் கிடங்கில் நாளொன்றுக்கு 50 வெள்ளி வாடகை செலுத்த வேண்டும் என்றும் அவர் சொன்னார்.