NATIONAL

நாட்டின் 16ஆவது மாமன்னராக பகாங் சுல்தான் தேர்ந்தெடுக்கப்பட்டார்

ஷா ஆலம், ஜன.21:

நாட்டின் 16ஆவது மாமன்னராக பகாங் சுல்தான் அப்துல்லா சுல்தான் அகமது ஷா தேர்ந்தெடுக்கப்பட்டார். 59 வயது சுல்தான் அப்துல்லா சுல்தான் அகமது ஷா, இம்மாதம் 31ஆம் தேதியிலிருந்து, அடுத்த 5 ஆண்டுகளுக்கு மலேசிய மாமன்னராகப் பதவி வகிப்பார்.

அரச முத்திரைக் காப்பாளர் டான்ஸ்ரீ சயிட் டேனியல் சயிட் அகமது இன்று இந்த அறிவிப்பை செய்தார்.

இஸ்தானா நெகாராவில் இன்று நடைபெற்ற மலாய் ஆட்சியாளர்களின் 251 ஆவது சிறப்புக் கூட்டத்தில் புதிய மாமன்னர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதே கூட்டத்தில், துணை மாமன்னராக பேரா சுல்தான், சுல்தான் நஸ்ரின் ஷா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்தச் சிறப்புக் கூட்டத்திற்கு திரெங்கானு ஆட்சியாளர் சுல்தான் மிர்ஸான் ஜைனல் அபிடின் தலைமையேற்றார்.

இம்மாதம் 6ஆம் தேதி கிளந்தான் சுல்தான் ஐந்தாம் முகமது அரியணை துறந்ததையடுத்து மலேசியாவில் புதிய மாமன்னரைத் தேர்ந்தெடுக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது.


Pengarang :