ஷா ஆலம், பிப். 19:
சிலாங்கூரின் ஆற்றல், கடப்பாடு மற்றும் நேர்மை ஆகிய அம்சங்கள் மீதான சிறப்பு செயற்குழு (செல்கெட்) வெளியிட்ட தொடர் அறிக்கைகள் இம்மாநில நிர்வாகத்தின் நற்பெயரை நிலை நாட்டுவதில் வெற்றி கண்டுள்ளன.
செல்கெட் நாடாளுமன்ற நிலையிலோ அல்லது மற்ற மாநில நிர்வாகத்திலோ இதுவரை அமல்படுத்தப்படவில்லை. ஆகையால் இது குறித்து மக்கள் இப்போது பேசத் தொடங்கியுள்ளனர் என்று இதன் தலைவர் எங் சூ லிம் தெரிவித்தார்.
இச்செயற்குழு தோற்றுவிக்கப்பட்டது முதல் முன் வைக்கப்பட்ட பிரச்னைகளை அடையாளம் காண்பதற்காக பல விசாரணைகளை இக்குழு மேற்கொண்டதாக அவர் சொன்னார்.
“2009 ஆம் ஆண்டு தொடங்கி மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட நிதி ஒதுக்கீடு, மணல் போன்ற விவகாரங்களுக்குத் தீர்வு கண்டுள்ளதோடு நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் துணைவியர்களுக்கான ஒதுக்கீடு வழக்கிலும் இக்குழு வெற்றி பெற்றது” என்று அவர் மேலும் கூறினார்.