செமிஞ்சே, பிப்ரவரி 23:
நாட்டின் நிர்வாகத்தை கையில் எடுத்த பிறகு பல்வேறு பிரச்னைகள் யாவற்றையும் கடந்து பாக்காத்தான் ஹாராப்பான் மத்திய அரசாங்கம் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற கடுமையாக பாடுபடும் என துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ டாக்டர் வான் அஸிஸா வான் இஸ்மாயில் சூழுரைத்தார். 14-வது பொதுத் தேர்தலில் போது எதிர்க்கட்சியாக இருந்த பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி முந்தைய அரசினால் ஏற்பட்ட பிரச்சனைகளை உணர முடியாத சூழ்நிலை காரணமாக வாக்குறுதிகளை நிறைவேற்ற கால அவகாசம் மக்கள் வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.
ரிஞ்சிங் நகரின் செக்சன் 6-இல் அமைந்துள்ள இஸ்தீக்காமா தொழுகை இடத்தில் நடந்த துப்பரவு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது இவ்வாறு அவர் கூறினார். சேமிஞ்சே இடைத் தேர்தலில் பாக்காத்தான் ஹாராப்பான் வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்ய அங்கு வான் அஸிஸா வந்தார். அவரோடு பெர்சத்து கட்சியின் துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ முக்ரீஸ் மகாதீர் மற்றும் செமிஞ்சே சட்ட மன்ற பாக்காத்தான் ஹாராப்பான் வேட்பாளர் முகமட் ஹைமான் ஸைனாலியும் உடன் இருந்தனர்.