கூலிம், மார்ச் 29-
வளர்ப்பு பிராணிகளுக்குத் தேவையான உணவு தானியங்கள் பயிரிடும் துறையில் ஈடுபட்டவர்கள் மாதந்தோறும் கனிசமான லாபத்தை அடைந்து வருகின்றனர்.
கம்போங் பிகான் அருகே 7 ஹெக்டர் நிலப்பரப்பில் நேப்பியர் எனும் ஒரு வகை புல் தோட்டத்தை உருவாக்கிய ஷாஹெமி முகமது ரட்ஸி ( வயது 31), அதற்கு முன்னர் மின்சாரக் கம்பிகள் பொருத்தும் வேலை செய்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
“சிறப்பு இயந்திரம் கொண்டு அறுக்கப்படும் புற்களை 30 முதல் 50 பைகளில் அடைத்து விற்பனை செய்து வருகிறோம். 25 கிலோ கிராம் 10 வெள்ளி என்ற விலையில் விற்கப்படும் புற்கள் மூலம் மாதந்தோறும் 9 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வெள்ளி வரை வருமானம் கிடைக்கிறது” என்றார் ஷாஹெமி.
50 கிலோ கிராம் எடையிலான புல் கட்டுகள் 45 வெள்ளிக்கு விற்கப்படும் வேளையில் தங்களின் நேப்பியர் புற்கள் கிலோ ஒன்று 25 காசு என்ற விலையில் விற்கப்படுவதால், கால்நடை பண்ணைத் தோட்டக்காரர்கள் தங்களுக்கு நல்ல ஆதரவை வழங்கி வருகின்றனர் என்றார் பொது நிர்வாகத் துறையில் பட்டம்பெற்ற ஒரு பட்டதாரியான ஷாஹெமி..