கோலாலம்பூர், மே 23-
தம் மீது சுமத்தப்பட்ட சபா வெட்டுமர குத்தகை தொடர்பான 36 ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் 37.8 மில்லியன் அமெரிக்க டாலர் மற்றும் 2.5 மில்லியன் அமெரிக்க டாலர் பணச் சலவை செய்தது தொடர்பான 16 குற்றச்சாட்டுகளை சபா முன்னாள் முதலமைச்சர் டான்ஸ்ரீ மூசா அமான் மீண்டும் மறுத்தார்.
நீதிபதி கோலின் லாரன்ஸ் செகுவேரா முன்னிலையில், மூசா (வயது 68) மீது சுமத்தப்பட்டுள்ள அந்த 52 குற்றச்சாட்டுகளும் நீதிமன்ற மொழிப்பெயர்ப்பாளரால் சுமார் ஒரு மணி நேரம் வாசிக்கப்பட்டது.
உடல்நிலை காரணமாக குற்றவாளி கூண்டில் அமர அனுமதிக்கப்பட்ட மூசா, அத்தனை குற்றச்சாட்டுகளையும் மறுத்ததோடு அவற்றின் மீது விசாரணை நடத்தும்படியும் கோரினார்.
செக்ஷன் நீதிமன்றத்தில் இருந்து உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்ட அந்த வழக்கில் இன்று முதன் முறையாக மூசா மீதான குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்டன.
முன்னதாக, மூசா அமான் மீதான 35 ஊழல் குற்றச்சாட்டுகளும் 16 பணச் சலவை குற்றச்சாட்டுகளும் ஏக காலத்தில் விசாரிக்கப்பட வேண்டும் என்று அரசாங்கத் தரப்பு துணை வழக்கறிஞர் டத்தோ ராஜா ரோஜாலா ராஜா தோரான் நீதிமன்றத்தைக் கேட்டுக் கொண்டார்.
இந்த விண்ணப்பத்திற்கு ஆட்சேபம் ஏதும் எழாததால், நீதிபதி அதை ஏற்றுக் கொண்டதோடு அடுத்தாண்டு ஜூன் 8 ஆம் தொடங்கி 22 நாட்களுக்கு விசாரணை நடைபெறும் என்று தேதி நிர்ணயித்தார்.