ஷா ஆலம், ஆகஸ்ட் 19:
மாநில அரசாங்கம் பரிவுமிக்க மக்கள் நலத் திட்டங்களை (ஐபிஆர்) மறுசீரமைப்பு மட்டுமே செய்துள்ளது என்றும் வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறவில்லை என சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் அமிரூடின் ஷாரி வலியுறுத்தினார். இத்திட்டத்தின் மறுசீரமைப்பு இரண்டு ஆண்டுகளில் சிறப்பாக செயல்படுத்தப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
” ஐபிஆர் திட்டங்களை மறுசீரமைப்பு செய்த பின்னர், அதன் பயன்பெறுவர்களை அதிகரிப்பு செய்வதா அல்லது அதன் தொகையை அதிகரிக்க வேண்டுமா என்று முடிவு செய்யப்படும். மாநில பொருளாதார திட்டமிடல் மற்றும் மேம்பாட்டு பணிகள் மீது மாநில நிர்வாகம் கவனம் செலுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் இத்திட்டம் மறுசீரமைப்பு செய்யப்பட்டது,” என்று ஷா ஆலம் பல்நோக்கு மண்டபத்தில் இடம்பெற்ற சிலாங்கூர் மாநில நகராட்சி மன்ற உறுப்பினர்களின் செயல்பாடு மேம்பாட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது இவ்வாறு அமிரூடின் ஷாரி வலியுறுத்தினார்.