சிப்பாங், ஆக.22-
கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் (கேஎல்ஐஏ) இரு முனையங்களிலும் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்தத் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வைஃபை இணையத் தொடர்பு, விமான பயண விவரப் பட்டியல் பலகை, பதிவு முகப்பிடங்கள் மற்றும் பயணப் பெட்டிகள் அனுப்பும் நடவடிக்கை போன்றவை செயல்படாமல் போயின.
செவ்வாய்க்கிழமை இரவு தொடங்கிய இந்தத் தொழில்நுட்பக் கோளாறைச் சரிசெய்யும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக விமான நிலையத்தின் நடத்துநரான மலேசிய ஏர்போர்ட்ஸ் நிறுவனம் கூறியது.
பயணிகளுக்கு உதவி புரிய சம்பந்தப்பட்ட பகுதிகளில் விமானப் பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாகவும் இப்பிரச்னை மேலும் ஒரு நாள் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அறிக்கை ஒன்றின் வழி அந்நிறுவனம் தெரிவித்தது.
நடப்புச் சூழலைக் கருத்தில் கொண்டு பயணிகள் அனைவரும் தங்கள் பயணத்திற்கு 4 மணி நேரத்திற்கு முன்பாக விமான நிலையத்திற்கு வந்தடையுமாறு ஆலோசனை கூறப்பட்டுள்ளது.