ஈப்போ, ஆகஸ்ட் 25:
பேராக் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் பாவுல் யோங் சூ கியோங் தற்போது எதிர்நோக்கும் கற்பழிப்பு வழக்கில் கவனம் செலுத்தும் நோக்கில் தமது பதவியில் இருந்து விடுமுறையில் செல்வதாக முடிவு எடுத்துள்ளார். மாநிலத்தின் வீடமைப்பு, ஊராட்சி மன்றம், பொது போக்குவரத்து, இஸ்லாமிய அல்லாதவர்கள் விவகாரம் மற்றும் புதிய கிராமம் ஆகிய பொறுப்புகளுக்கான ஆட்சிக்குழு உறுப்பினரான பாவுல் யோங், தாம் மீது பூசப்பட்ட களங்கத்தை போக்க போராடப் போவதாக அறிவித்துள்ளார்.
தற்போதைய சூழ்நிலையில், துரோனோ சட்ட மன்ற வாக்காளர்களுக்கு தமது சேவையை தொடர்ந்து வழங்கி வரப் போவதாக பாவுல் யோங் அறிவித்துள்ளார்.
” சுயநலம் கருதாமல், மாநில மக்களின் கருத்தில் கொண்டு ஒரு பொறுப்பு மிக்க அரசியல்வாதியாக இந்த முடிவை எடுத்திருக்கிறேன். இந்த முடிவை மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமாட் பைசால் அஸூமூவிடம் இன்று தெரிவிக்க இருக்கிறேன்,” என்று தமது அறிக்கையில் பாவுல் யோங் தெரிவித்திருக்கிறார்.