கோலாலம்பூர், ஆக.27:
பல்வேறு இன, சமய, மொழி, கலாச்சார மக்கள் மத்தியில் கடந்த 62 ஆண்டுகளாக நிலவி வரும் புரிந்துணர்வு, சகிப்புத் தன்மை, ஒருமைப்பாடு உணர்வுகளைத் தவிர்த்து நாட்டின் சுதந்திரத்தை கட்டிக்காப்பதற்கு வேறு வழிமுறை ஏதும் கிடையாது எனத் தெரிவிக்கப்பட்டது.
பெர்லிஸ் தொடங்கி ஜோகூர் வரை மற்றும் சபா, சரவாக் வரை விரியும் மலேசியாவில் 100 வகையான இனங்கள், பல்வேறு கலாச்சாரம், மொழி, சமய நம்பிக்கை, பண்புகளைக் கொண்ட மக்கள் வாழும் தனித்தன்மைமிக்க நாடாக மலேசியா திகழ்கிறது.
சபா மற்றும் சரவாக் ஆகிய மாநிலங்களில் உள்ள பூர்வகுடி மற்றும் பிரிபூமி மக்களைத் தவிர்த்து சீக்கியர்கள், கிளந்தானில் உள்ள சீன வம்சாவளியினர், பாபா நோஞ்ஞா , செட்டி, சியாம் சமூகத்தினர், போர்த்துகீசிய வம்சாவளியினர் என பல்வேறு சிறுபான்மை இனத்தவரும் நாட்டு மக்களில் அடங்குவர் என நம்மில் பலர் இன்னும் அறியாமல் உள்ளோம்.
இந்த சிறுபான்மை சமூகங்களும் நாட்டின் மேம்பாட்டிற்கு நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பும் பின்னரும் பங்களித்துள்ளனர் என்று மலேசிய புத்ரா பல்கலைக்கழக மனித வாழ்வியல் பிரிவின் மூத்த விரிவுரையாளர் பேராசிரியர் டாக்டர் சர்ஜிட் சிங் கில் கூறினார்.