கிள்ளான், செப். 24-
தங்களின் வர்த்தகத்தைத் தொடங்க மற்றும் விரிவாக்கம் காண்பதற்கு ஏதுவாக கிள்ளான் மாவட்ட புளூபிரிண்ட் உதவி திட்டத்தின் கீழ் 20 பேருக்கு உபகரணங்கள் வாங்குவதற்காக மொத்தம் 63,400 வெள்ளி வழங்கப்பட்டது.
கடந்த 2003 ஆம் ஆண்டு முதல் அமல்படுத்தப்பட்டு வரும் இத்திட்டம் குடும்ப பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு சிறந்ததொரு தடமாகும் என்று மாநில சமூக பொருளாதார மேம்பாடு மற்றும் பரிவுமிக்க அரசாங்க துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. கணபதிராவ் தெரிவித்தார்.
மாநில அரசாங்கம் வழங்கும் இந்த உபகரணங்கள் சிறு வர்த்தகர்கள் தங்களின் பொருளாதார தரத்தை மேம்படுத்துவதற்கு ஓர் உத்வேகத்தை ஏற்படுத்தும் என்று அவர் மேலும் சொன்னார்.
“ஏழ்மையில் இருந்து தங்களை விடுவிப்பதற்காக இவர்கள் மிகவும் துணிவுடன் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒருவரின் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பதும் இதுவே” என்பதையும் கணபதிராவ் சுட்டிக் காட்டினார்.
கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை இம்மாநிலம் முழுமையும் 4,109 சிறு வணிகர்களுக்கு 12.9 மில்லியன் வெள்ளி செலவிடப்பட்டிருப்பதாக இங்கு கிள்ளான் நில அலுவலக மண்டபத்தில் நடைபெற்ற 2019 கிள்ளான் மாவட்ட வறுமை ஒழிப்பு புளூபிரிண்ட் உதவி நிதி ஒப்படைப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது செய்தியாளர்களிடம் பேசினார்.