ஷா ஆலம், நவம்பர் 25:
இஸ்லாம் அல்லாத வழிபாட்டுத் தளங்களின் ஒதுக்கீடு 217 ஆலயங்களுக்கு சிலாங்கூர் மாநில அரசாங்கம் இந்த ஆண்டு வழங்கியுள்ளது. சிலாங்கூர் மாநில வறுமை ஒழிப்பு, பரிவு மிக்க அரசாங்கம் மற்றும் தோட்டத் தொழிலாளர் ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. கணபதி ராவ் தலைமையில் ரிம 1.7 மில்லியன் நிதி ஆலயங்களின் பிரதிநிதிகளிடம் வழங்கியது குறிப்பிடத்தக்கது. இந்த நிதி உதவிகளின் வழி ஆலயங்கள் பல்வேறு சமூக நலத்திட்டங்களை இந்திய சமுதாயத்திற்கு செய்ய முடியும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
” இந்த ஆண்டின் இறுதி கட்ட நிதியான ரிம 311,000-ஐ மொத்தம் 37 ஆலயங்களுக்கு இன்று பகிர்ந்தளிக்கப்பட்டது. எல்லா மதங்களையும் பராமரிக்கும் அரசாங்கமாக சிலாங்கூர் மாநில அரசாங்கம் விளங்குகிறது,” என்று கணபதி ராவ் தெரிவித்தார்.
சிலாங்கூர் மாநில செயலகத்தில் நடைபெற்ற இஸ்லாம் அல்லாத வழிபாட்டுத் தளங்களுக்கு நிதி மற்றும் உயர்கல்வி பெறும் மாணவர்களுக்கு நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சியில் கணபதி ராவ் மேற்கண்ட விவரங்களை கூறினார்.