கோலாலம்பூர், டிச.10-
தொடர்பு துறை சம்பந்தப்பட்ட அனைத்து அம்சங்களையும் தரம் உயர்த்துவதிலும் குறைபாடுகளைக் களைவதிலும் தொடர்பு பல்லூடக அமைச்சு கவனம் செலுத்தி வருவதாக அதன் அமைச்சர் கோபிந்த சிங் டியோ கூறினார்.
“என்னைப் பொருத்தமட்டில் நிறை வேலைகளை அமல்படுத்த வேண்டியுள்ளது. டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் தொலைத் தொடர்பு சம்பந்தப்பட்ட தொழில்நுட்ப அம்சங்களைத் தரம் உயர்த்தும் நோக்கத்தில் எனது அமைச்சைப் பல்வேறு பிரிவுகளாகப் பிரித்துள்ளேன்” என்றார் அவர்.
“எனினும், என் மீது கூறப்படும் விமர்சனங்கள் குறித்து எனக்கொரு பிரச்னை இல்லை. இது அவரவர் கருத்துக்களைத் தெரிவிக்க அனுமதிக்கு ஜனநாயக நடைமுறை என்று நான் நினைக்கிறேன்” என்றும் அவர் சொன்னார்.
தம்மைப் பொறுத்த மட்டில் வேலை தொடர்ந்து நடைபெற வேண்டும்.
அதோடு மேலும் சிறந்த வெற்றியை அடைய இன்னும் கடுமையாக உழைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று 2019 தேசிய மலேசிய இந்திய டிஜிட்டல் பொருளாதார 3ஆம் ஆண்டு கூட்டத்தைத் தொடக்கி வைத்த பின்னர் கோபிந்த் சிங் கூறினார்.
ஓர் அமைச்சர் மற்றும் தலைவர் என்ற முறையில் விமர்சனங்களைச் செவிமடுப்பது அவசியமாகும், அவற்றின் வழி மேலும் வெற்றிகளைப் பதிவுச் செய்ய வேண்டும் என்றார் அவர்.