கோலாலம்பூர், டிச.10-
பெல்க்ரா நிறுவனம் அதன் 2/2019 இடைக்கால இலாபத் தொகையான 50.54 மில்லியன் ரிங்கிட்டை அதன் 67,000 உறுப்பினர்களுக்கு டிசம்பர் 15ஆம் தேதி தொடங்கி பகிர்ந்தளிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டது.
2019ஆம் ஆண்டு ஜனவரி தொடங்கி ஆகஸ்டு மாதம் வரையில் கிடைக்கப் பெற்ற 72.20 மில்லியன் ரிங்கிட் வருவாயில் இருந்து 70 விழுக்காட்டை பெல்க்ரா அதன் உறுப்பினர்களுக்கு பகிர்ந்தளிக்க உள்ளதாக பொருளாதார விவகாரத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ முகமது அஸ்மின் அலி கூறினார்.
“இதன் எஞ்சிய 30 விழுக்காடு தோட்டங்களுக்கான பராமரிப்பு செலவினங்களுக்கு பயன்படுத்தப்படும்” என்றார் அவர்.
“பகிர்ந்தளிக்கப்படவிருக்கும் இலாபத் தொகையானது 641 தோட்டங்களின் உரிமையாளர்களாக இருக்கும் உறுப்பினர்களின் தோட்ட உற்பத்தி வழி கிடைத்த நிகர இலாபம்” என்று அஸ்மின் அலி விவரித்தார்.
2018ஆம் ஆண்டு இரண்டாம் அரையாண்டில் வழங்கப்பட்ட இலாப பங்கீட்டுன் ஒப்பிடுகையில் 2019ஆம் ஆண்டுக்கான தொகை 25.27 மில்லியன் ரிங்கிட் அல்லது 50 விழுக்காடு உயர்ந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.