சிரம்பான், டிச.25-
மந்தின் நான்காவது மைல் சுற்று வட்டாரப் பகுதியில் திடீரென்று ஏற்பட்ட துர்நாற்றத்திற்கான காரணத்தை மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் கண்டறிந்தனர். அருகாமையில் உள்ள ஆறு ஒன்றில் ரசாயனக் கழிவு சிந்தியிருந்ததே அதற்கு காரணம் என்று மந்தின் வட்டாரத் தீயணைப்பு படை வீரர்கள் சந்தேகிக்கின்றனர்.
இன்று அதிகாலை 5 மணியளவில் பொது மக்களிடம் இருந்து கிடைத்த புகாரைத் தொடர்ந்து, சம்பவம் நடந்த இடத்திற்கு தனது படையின் ஆறு வீரர்கள் விரைந்து அனுப்பப்பட்டதாக சிரம்பான் போம்பா படைத் தலைவர் முகமது இட்ரிஸ் கூறினார்.
சம்பவ இடத்தை அடைந்த போது, அங்கு எண்ணெய் சிதறல் காணப்பட்டதோடு சில மீன்கள் இறந்துக் கிடக்கக் காண்ப்பட்டன. அது தவிர்த்து, தண்ணீர் தர அளவு 5.8 எனக் காட்டியதாக அவர் தெரிவித்தார்
எண்ணெய் சிதறல்கள் காணப்பட்டத்தைத் தொடர்ந்து அப்பகுதிக்கு சிறப்பு ரசாயனப் பிரிவுப் படையினர் அங்கு அழைக்கப்பட்டனர். அவர்களோடு சிரம்பான் 2 தீயணைப்புப் படையைச் சேர்ந்த 10 உறுப்பினர்களும் அங்கு விரைந்தனர் என்று அவர் சொன்னார்.
“சம்பந்தப்பட்ட ரசாயன மாதிரி சுற்றுச் சூழல் இலாகா சோதனைக் கூடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது” என்றார் அவர்.