கோத்தா கினபாலு, ஜன.2-
கிமானிஸ் நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது ஊழல் மற்றும் லஞ்சம் குறித்த புகார்களை மக்கள் தெரிவிப்பதற்கு ஏதுவாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் நடவடிக்கை அறை ஒன்றை இன்று திறந்துள்ளது.
இந்த நடவடிக்கை அறை இடைத்தேர்தல் பிரச்சார காலத்தில் 24 மணி நேரமும் செயல்படும் என்றும் இது கோத்தா கினபாலு எஸ்பிஆர்எம் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளதாக சபா எஸ்பிஆர்எம் இயக்குநர் எஸ். கருணாநிதி கூறினார்.
அதேவேளையில், தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளைக் கண்காணிக்க ஆங்காங்கு ஆணையத்தின் அதிகாரிகள் பணியில் அமர்த்தப்படுவர் என்றார் அவர்.
கிமானிஸ் இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு நடவடிக்கை ஜனவரி 4ஆம் தேதியில் நடைபெறும் என்றும் முன்னரே வாக்களிக்கும் நடவடிக்கை ஜனவரி 14லும் தேர்தல் 18ஆம் தேதி நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.