கோலாலம்பூர், ஜன.1-
இவ்வாண்டு மத்தியில் மேம்பாடு காணத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படும் நாட்டின் பொருளாதாரம் கடந்த 2019ஆம் ஆண்டின் வளர்ச்சி விகிதமான 4.7ஐக் கடந்து 4.8 விழுக்காடு வளர்ச்சியைப் பதிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மொத்த உற்பத்தி விகிதம் 4.6 விழுக்காட்டிலிருந்து 4.5 விழுக்காடாகக் குறையும் என்று உலக வங்கி மற்றும் பொருளாதார நிபுணர்கள் கருதினாலும், தொடர்ந்து ஆக்கப்பூர்வமான வளர்ச்சியடையும் என அரசாங்கம் திடமாக நம்புகிறது என்று நிதியமைச்சர் லிம் குவான் எங் தெரிவித்தார்.
“மூலப் பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதாலும், அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான வர்த்தக போருக்குத் தீர்வு தென்படுகின்ற வேளையில் பொது முதலீடு விரிவடைந்து வருவதாலும் அரசாங்கம் அதன் வளர்ச்சி திட்டங்கள் மீது நம்பிக்கையுடன் இருக்கிறது என்று பெர்னாமாவுடனான நேர்காணலில் குவான் எங் கூறினார்.
வாஷிங்டன் – பெய்ஜிங் வர்த்தக போருக்கு தீர்வு பிறந்தால், மலேசியாவின் பொருளாதாரம் பீடு நடைபோடுவதோடு எழுச்சியடையும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் சொன்னார்.