கோலாலம்பூர், ஜன.8
நாடு முழுமையும் சேதமடைந்த பகுதிகளைச் சீரமைக்கும் முயற்சியாக இவ்வாண்டு தொடங்கி வரும் 2025 ஆம் ஆண்டு வரை 100 மில்லியன் மரங்கள் நடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. உயிரியல் பன்முகத்தன்மை மற்றும் சுற்றுச் சூழலைப் பாதுகாக்கும் பொருட்டு இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக நீர், நிலம், மற்றும் இயற்கை வள அமைச்சர் டத்தோ டாக்டர் சேவியர் ஜெயகுமார் கூறினார்.
வரும் மார்ச் 21 ஆம் தேதி தொடங்கப்படும் இத்திட்டத்திற்கு வர்த்தக மற்றும் தனியார் துறையிடமிருந்து ஒத்துழைப்பு பெரிதும் எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சர் சொன்னார். தலைநகரில் முதன் முறையாக நடைபெற்ற வர்த்தக மற்றும் தனியார் துறைக்கான உயிரியல் பன்முகத்தன்மை மீதான மாநாட்டில் உரை நிகழ்த்துகையில் சேவியர் இதனைக் குறிப்பிட்டார்.
2016-2025 (டிகேபிகே) தேசிய உயிரியல் பன்முகத்தன்மை கொள்கைக்கு ஏற்ப டிஎசி வாட்டர் & மேனேஜ்மெண்ட் ஏற்பாட்டிலான இந்த மாநாடு உயிரியல் பன்முகத்தன்மையைப் பேணும் அரசாங்கத்தின் முயற்சியை பல வர்த்தக சமூகத்தினர் ஆதரிப்பதை ஊக்குவிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.