பெட்டாலிங் ஜெயா, பிப்.4-
நெகிழிப் பைகளுக்கான கட்டணங்களை வர்த்தகளிடம் இருந்து ஊராட்சி துறை எடுத்துக் கொள்ளும் நடவடிக்கை இவ்வாண்டு முழுவதும் தொடரும் என்று விளக்கமளிப்பு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. 2025ஆம் ஆண்டுக்குள் சிலாங்கூரை நெகிழியற்ற மாநிலமாக உருவாக்கும் இலக்கு குறித்து வர்த்தகர்கள் உணர்ந்திருப்பதை இக்கூட்டம் உறுதி செய்ததாக சுற்றுச் சூழல் துறை ஆட்சிக் குழு உறுப்பினர் ஹீ லோய் சியான் கூறினார்.
“நெகிழிப் பைகளுக்கான கட்டணத்தை வர்த்தகர்கள் மூலம் வசூலித்த நடவடிக்கையானது பயனீட்டாளர்கள் மத்தியில் நம்பிக்கையை இழந்துள்ளது. எனவே, இந்த கட்டண வசூலிப்பு நடவடிக்கையை இம்மாதம் முதல் தேதி தொடங்கி ஊராட்சி மன்றம் எடுத்துக் கொள்வது என மாநில ஆட்சிக் குழுவில் முடிவெடுக்கப்பட்டது. இந்தத் தொகை சுற்றுச் சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்துவதற்காக அமானா நிதியிடம் ஒப்படைக்கப்படும்” என்றார் அவர்.
பெட்டாலிங் ஜெயாவில் உள்ள சிவிக் மண்டபத்தில் நடந்த நெகிழிப் பை கட்டண வசூலிப்பு குறித்த விளக்கமளிப்பு கூட்டத்தில் ஹீ மேற்கண்டவாறு பேசினார்
பெட்டாலிங் ஜெயா டத்தோ பண்டார் டத்தோ முகமது சாயுத்தி பாக்கார் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சிக்கு சுமார் 200 வர்த்தகர்கள் வந்திருந்தனர்.