ஷா ஆலம், மார்ச் 16-
நாட்டில் உள்ள இதர மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் கடந்தாண்டு ஜனவரி தொடங்கி செப்டம்பர் மாதம் வரையில் தொழில்துறை மற்றும் முதலீட்டு துறையில் மிக உயர்ந்த மதிப்பிலான அடைவு நிலையை சிலாங்கூர் மாநிலம் பதிவு செய்துள்ளது.
இக்கால கட்டத்தில் மொத்தம் 16.4 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான 232 தொழில்சாலை திட்டங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன என்று மாட்சிமை தங்கிய சிலாங்கூர் ஆட்சியாளர் சுல்தான் ஷராஃபுடின் இட்ரிஸ் ஷா குறிப்பிட்டார்.
மாநிலத்தின் பொருளாதார நிலைத்தன்மையும் வளமும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு தூண்டுகோளாக இருப்பதாக மாநில ஆட்சியாளர் தமதுரையில் தெரிவித்தார்.
தைவான் முதலீட்டாளர்கள் வழி 3.39 பில்லியன் ரிங்கிட், ஜப்பான் முதலீட்டாளர்கள் வழி 2.63 பில்லியன் ரிங்கிட், சீன முதலீட்டாளர்கள் வழி 1.71 பில்லியன் ரிங்கிட் பெறுமான முதலீடுகளைப் பெற்றுள்ள சிலாங்கூரின் மொத்த நேரடி அந்நிய முதலீடு 11.17 பில்லியன் ரிங்கிட்டாகும்.
“அதேவேளையில், சிலாக்கூரின் உள்நாட்டு மொத்த முதலீடு 5.27 பில்லியன் ரிங்கிட்டாகும். இந்த எண்ணிக்கையும் இதர மாநிலங்களைக் காட்டிலும் அதிகமாகும். இந்த முதலீடுகளின் வாயிலாக மொத்தம் 17,000 உயர் திறனாற்றல் வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன” என்றும் சிலாங்கூர் சுல்தான் தமதுரையில் குறிப்பிட்டார்.