ஷா ஆலம், மார்ச் 16-
100 நாட்களில் அங்கீகாரம் எனும் கொள்கையானது மாநிலத்தின் பொருளாதாரத்தை மேலும் துரிதப்படுத்தும் என்று சிலாங்கூர் மாநில ஆட்சியாளர் சுல்தான் ஷராஃபுடின் இட்ரிஸ் ஷா நம்பிக்கை தெரிவித்தார்.. மலேசியாவில் முதன் முறையாக அமல் படுத்தப்பட்டுள்ள இந்தக் கொள்கையானது தொழில்துறை மற்றும் முதலீட்டு துறைகளின் அங்கீககார நடவடிகையை எளிதாக்குவதுடன் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் என்றார் அவர்.
முன்பு இந்நடவடிக்கைக்காக எடுத்துக் கொள்ளும் 270 நாட்களைக் குறைப்பதோடு 100 நாட்களில் அங்கீகாரம் எனும் கொள்கையானது அதனை சீர்படுத்தும் என்று அவர் சொன்னார்.
“இவ்வாண்டு சிலாங்கூர் மாநிலம் 12 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான முதலீட்டை பெற இலக்கு கொண்டுள்ளது. எனினும், அமெரிக்கா-சீன வர்த்தக போர், மத்திய கிழக்கு நாடுகளின் நிலையற்ற அரசியல் சூழ்நிலை, அன்மையில் பரவி வரும் கோவிட்-19 தொற்று நோய் ஆகியவற்றின் காரணமாக மாநில பொருளாதார வளர்ச்சி மிதமாகவே அதாவது 3.2 விழுக்காட்டிற்கு 4.2 விழுக்காட்டிற்கு நடுவில் இருக்கும் என்று கணிக்கப்படுகிறது” சிலாங்கூர் ஆட்சியாளர் தெரிவித்தார்.
சிலாங்கூர் மாநிலத்தின் 14ஆவது சட்டமன்ற கூட்டத் தொடரை அதிகாரப்பூர்மாகத் தொடக்கி வைத்து ஆற்றிய உரையில் சுல்தான் ஷராஃபுடின் இட்ரிஸ் ஷா மேற்கண்டவாறு உரையாற்றினார்.