ஷா ஆலம், மார்ச் 16-
மாநிலம் முழுவதிலும் மேலும் 5,000 ரகசிய ஒளிப்பதிவு காமிராக்களைப் பொருத்த மாட்சிமை தங்கிய சிலாங்கூர் ஆட்சியாளர் சுல்தான் ஷராஃபுடின் இட்ரிஸ் ஷா இணக்கம் தெரிவித்துள்ளார். மக்கள் பாதுகாப்பான மாநிலத்தில் வசிப்பதை உறுதி செய்வதே இந்நடவடிக்கையின் நோக்கமாகும் என்றார் அவர்.
அதே வேளையில், ஊராட்சி மன்றங்களில் ‘போலீஸ் பந்துவான் திட்டத்தை’ அமல்படுத்துவதில் அரச மலேசிய போலீஸ் படையின் ஒத்துழைப்பை மாநில அரசாங்கம் நாடியுள்ளது என்று சிலாங்கூர் 14ஆவது சட்டமன்ற கூட்டத் தொடரைத் தொடக்கி வைத்து ஆற்றிய உரையில் சிலாங்கூர் ஆட்சியாளர் தெரிவித்தார்.
பொது மக்கள் பாதுகாப்புடன் வசிப்பதை உறுதி செய்யும் சிலாங்கூர் அரசாங்கத்தின் திட்டத்தை தாம் வரவேற்பதாக அவர் கூறினார்.சிலாங்கூர் மாநிலத்தின் பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்த 2 மில்லியன் ரிங்கிட்டை மாநில அரசாங்கம் ஒதுக்கீடு செய்துள்ளது. இதன் வழி பாதுகாப்பு, அமைதி மற்றும் நல்லிணக்கமான சூழலில் வாழ்வது குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதும் இந்நடவடிக்கையின் நோக்கமாகும்.