ஷா ஆலம், ஏப்.6-
உலு லங்காட் பகுதியில் கோவிட்-19 பரவல் நேற்று முன் தினம் 314ஆக இருந்த எண்ணிக்கை நேற்று 328 ஆக அதிகரித்தது.
கம்போங் சுங்கை லூயின் எண்ணிக்கை 90 என நிலை மாறாத வேளையில் இதர பகுதிகளில் 14 புதிய சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டதாக சுகாதார அமைச்சு அறிவித்தது.
கடந்த மார்ச் 30ஆம் தேதி தொடங்கி இப்பகுதியில் உள்ள பத்து 21 முதல் பத்து 24 ஆகியவற்றில் குடியிருக்கும் 1,797 பேர்களில் 1,685 மீது சுகாதார பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.இதனிடையே, ஜோகூர் சிம்பாங் ரெங்காமில் உள்ள 2 பகுதிகளில் 12 புதிய சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டதன் காரணமாக அதன் மொத்த எண்ணிக்கை 147ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை, உலு பெனுட்டில் 142 சம்பவங்களும் குளுவாங்கில் 18 சம்பவங்களும் பதிவு செய்யப்பட்டுள்ள வேளையில் நியோரில் ஒரு சம்பவம் பதிவு செய்யப்பட்டதாக அமைச்சின் அறிக்கை கூறியது. மற்றொரு நிலவரத்தில் கோலாலம்பூர், மெனாரா சிட்டி ஓன் பிளாசாவில் குடியிருக்கும் சுமார் 5 ஆயிரம் பேரில் 1,893 பேர் மீது மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 24 பேருக்கு தொற்று இருப்பது உறுதிப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.