ஷா ஆலம், ஏப்ரல் 8:
தமது மூன்று நண்பர்களுடன் நடமாடும் கட்டுப்பாடு ஆணை (பிகேபி) காலகட்டத்தில் பூப்பந்து விளையாடிய ஷா ஆலம் மாநகராட்சி மன்ற (எம்பிஎஸ்ஏ) உறுப்பினர் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என சிலாங்கூர் மாநில மந்திரி டத்தோ ஸ்ரீ பெசார் அமிருடின் ஷாரி உறுதிப் படுத்தினார். தற்போது காவல்துறையினர் இந்த சம்பவத்தை ஒட்டி தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் அதன் முடிவில் சம்பந்தப்பட்ட நபர் மீது ஒழுங்கு நடவடிக்கை பாயும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
” எம்பிஎஸ்ஏ ஏற்கனவே அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்றை வெளியிட்டனர். அதன் தொடர்பில் காவல்துறையிடம் ஒப்படைப்பதாக கூறிய நிலையில், நான் சம்பந்தப்பட்ட நபர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பரிந்துரை செய்கிறேன். காவல்துறை தனது விசாரணையை முதலில் முடிக்கட்டும். அதன் பிறகே, நாம் நடவடிக்கை எடுக்க முடியும்,” என்று தீபகற்ப மலாய் மாணவர்கள் கூட்டமைப்பின் பல்கலைக் கழக மாணவர்களுக்கான உதவி பயணத்தை சிலாங்கூர் மாநில தலைமையகத்தில் தொடக்கி வைத்து உரையாற்றும் போது இவ்வாறு அமிருடின் ஷாரி பேசினார்.