புத்ராஜெயா, ஏப்ரல் 21:
கோவிட்-19 வைரஸ் நோய் பரவி வருவதை தடுக்கும் நோக்கில் நடமாடும் கட்டுப்பாடு ஆணையை (பிகேபி) பிரகடனம் செய்த அரசாங்கம், அதை நிறுத்தும் முன் ஆறு விஷயங்களை ஆராய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது என்று சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் டத்தோ நூர் ஹிஸாம் அப்துல் தெரிவித்தார்.
இதில் பாதுகாப்பு கட்டுப்பாடுகள், நடமாடும் கட்டுப்பாடுகள், சுகாதார அமைப்பு திறன், அதிகமாக பாதிக்கப்படும் தரப்பினரை பாதுகாப்பது, புதிய நடைமுறையை அமல்படுத்துவது மற்றும் சமூகத்தின் தடுப்பு நடவடிக்கை செயல்படுத்துவது ஆகியவை அடங்கும் என அவர் விளக்கினார்.
” கோவிட்-19 வைரஸ் நோய் பரவலை தடுக்கும் முக்கிய நடவடிக்கையாக எல்லை காவலை மேலும் கடுமையாக்க வேண்டும். இதை நாம் செய்ய தவறினால் நோயை கட்டுப் படுத்த முடியாது. எல்லை காவலில் ஈடுபடும் போது தான் நாம் நோயாளிகளை அடையாளம் காண முடியும். அண்மையில் வெளிநாட்டில் இருந்து திரும்பிய 95 நபர்களுக்கு கோவிட்-19 தொற்று நோய் இருப்பதை நாம் உறுதி செய்தோம்.
” நாம் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் போது வைரஸ் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு தாவுவதை தடுக்க முடியும். அப்படி கூட்டங்களில் நாம் செல்லும் போது வைரஸ் பரவலை நாம் தடுக்க முடியாது,” என்று நூர் ஹிஸாம் தெரிவித்தார்.