கோலா லம்பூர், ஏப்ரல் 26:
கோவிட்-19 தொற்று நோய் பரவலை தொடர்ந்து நடமாடும் கட்டுப்பாடு ஆணையை (பிகேபி) பிறப்பித்துள்ள நிலையில் மக்கள் எதிர் நோக்கும் வாழ்க்கை சூழல்களை எதிர் கொள்ள அரசாங்கம் நாட்டு மக்களுக்கு எந்த சூழ்நிலையிலும் உறுதுணையாக இருக்கும் என்று பிரதமர் டான்ஸ்ரீ முஹீடின் யாசீன் நம்பிக்கை தெரிவித்தார். மக்களின் நல்வாழ்வுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தும் நோக்கில் பயணிக்கும் தேசிய கூட்டமைப்பு அரசாங்கம் எந்த ஒரு தரப்பினரும் விடுபடாமல் இருக்க பாடுபடும் என்று உறுதி அளித்தார். அது மட்டுமல்லாமல் எல்லா தரப்பினருக்கும் உதவிகள் சென்றடைந்துக் கொண்டிருக்கிறது என அவர் மேலும் குறிப்பிட்டார்.
” நாம் எடுத்த நடவடிக்கைகள் பலன் அளிக்கத் தொடங்கியுள்ளது. மக்களின் நல்வாழ்வுக்கு இது வித்திட்டுள்ளது. அரசாங்கத்தின் பங்கு என்ன, மக்களுக்கு உதவிகள் செய்யவும், மக்களை பாதுகாக்கவும் தான். இது தான் மிக முக்கியமான ஒன்று, எந்த ஒரு அரசாங்கமும் இதை செயல்படுத்தியே தீர வேண்டும். நாம் தொடர்ந்து பாதிக்கப்பட்ட நாட்டு மக்களுக்கு பல முயற்சிகளை மேற்கொண்டு வர வேண்டும். இதன் மூலம் மக்களின் நல்வாழ்வு மேலும் மேம்படுத்தப்பட வேண்டும்,” என்று ஆர்டிஎம் மற்றும் ஆஸ்ட்ரோ அவானி இணைந்து ஏற்பாடு செய்த கலந்துரையாடலில் பேசிய போது இவ்வாறு பிரதமர் கூறினார்.