ஷா ஆலம், ஏப்.28-
பெட்டாலிங், தாமான் மேகா பொது சந்தை வர்த்தகர் ஒருவருக்கு கோவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து அச்சந்தையின் அனைத்து வர்த்தகர்களும் பரிசோதனை நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டனர். இந்த பரிசோதனை நடவடிக்கை பெட்டாலிங் மாவட்ட சுகாதார அலுவலகத்தில் இன்று காலை 9 மணிக்கு மேற்கொள்ளப்பட்டது.
இந்த பரிசோதனை நடவடிக்கையின் போது பெட்டாலிங் ஜெயா பேரிடர் நிர்வாகச் செயற்குழு தலைவர் ஜோஹாரி அனுவார் உடனிருந்தார். நேற்று தொடங்கி அடுத்த 5 நாட்களுக்கு தாமான் மேக பொது சந்தை மற்றும் ஜாலான் ஓஸ்மான் பெரிய சந்தையும் தற்காலீகமாக மூடப்பட்டுள்ளதாக செய்தியாளர் சந்திப்பின் போது ஜோஹாரி தெரிவித்தார்.
“எனவே, தொற்று உறுதி செய்யப்பட்ட வர்த்தகருடன் தொடர்புள்ள இதர வர்த்தகர்களும் இந்த சோதனைக்கு முன் வரவேண்டும். தாமான் மேகா பொது சந்தையில் மொத்த 60 வர்த்தகர்கள் வர்த்தகம் புரிந்து வருகின்றனர்” என்றார் அவர். அதே வேளையில், ஜாலான் ஓஸ்மான் பெரிய சந்தையில் நாளை 9 மணி தொடனை பரிசோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அங்கு 578 வர்த்தகர்கள் வர்த்தகம் புரிவதாக அவர் சொன்னார்.