புத்ராஜெயா, மே 1:
நடமாடும் கட்டுப்பாடு ஆணை (பிகேபி) காலகட்டத்தில் பாதிக்கப்பட்ட பொருளாதாரம் மற்றும் சமூகம் சம்பந்தப்பட்ட அனைத்து துறைகளும் மே 4 ஆம் தேதி திறக்கப்படும் என்று பிரதமர் டான்ஸ்ரீ முஹீடின் யாசீன் இன்று சிறப்பு நேரலை நிகழ்ச்சியில் அறிவித்தார். உலக சுகாதார அமைப்பால் நிர்ணயிக்கப்பட்ட தரவு மற்றும் சிறந்த நடைமுறைகளின் அடிப்படையில், சுகாதார அமைச்சின் ஆலோசனையைப் பின்பற்றி, பொருளாதாரத் துறைகளை கவனமாக மீண்டும் திறக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக பிரதமர் அறிவித்தார்.
எதிர்வரும் மே 4, 2020 முதல், பொருளாதாரம் மற்றும் வணிக நடவடிக்கைகளின் கிட்டத்தட்ட அனைத்து துறைகளும், அரசாங்கம் நிர்ணயம் செய்த நடைமுறைகள் மற்றும் செயல்பாடுகளுக்கு உட்பட்டு செயல்பட அனுமதிக்கப்படும் என அவர் கூறினார். இருந்தாலும் , இன்னும் சில தொழில்களும் வணிகங்களும் செயல்பட அனுமதிக்கப்படாது என்றும் முகிதீன் கூறினார்.
” அவற்றில், பொதுக் கூட்டங்கள் மற்றும் மக்கள் நெரிசலை உள்ளடக்கிய வணிக நடவடிக்கை இதில் அடங்கும். திரையரங்குகள், பாடல் மையங்கள், பொழுதுபோக்கு மையங்கள், இரவு கேளிக்கை மையங்கள் , கேளிக்கை பூங்காக்கள், ரமலான் பஜார், திருவிழா விற்பனைகள் மற்றும் அனைத்து வகையான மாநாடுகள் மற்றும் கண்காட்சிகள் ஆகியவை அடங்கும்” என்று அவர் கூறினார்.
புதிய நடைமுறையின் கீழ், ஏராளமான மக்கள் சம்பந்தப்பட்ட நடவடிக்கைகளைத் தவிர, பெரும்பாலான பொருளாதார மற்றும் சமூக நடவடிக்கைகள் அனுமதிக்கப்படும் என்று முகிதீன் கூறினார். ஆனாலும், கடுமையாக்கப்பட்ட நடமாடும் கட்டுப்பாடு ஆணை (பிகேபிடி) அதிக கோவிட்-19 நேர்மறை பாதிப்புகள் உள்ள பகுதிகளில் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.