ஷா ஆலம், மே 15:
கோவிட் -19 தொற்று நோய் பரவலால் வணிக நடவடிக்கைகள் பாதிக்கப்பட்ட மொத்தம் 16,829 வணிகர்கள் மற்றும் வர்த்தகர்கள் மாநில அரசால் ரிம 500 (ஒரு முறை) உதவி நிதி பெற்றனர் என டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார். selangorprihatin.com மூலம் விண்ணப்பங்கள் இன்னும் திறந்த நிலையில் உள்ள நிலையில் இந்த உதவி நிதி தொடரும் என்றார்.
“சிலாங்கூரில் வணிகர்கள் மற்றும் வர்த்தகர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை மாநில அரசு புரிந்து கொள்ள முடிகிறது. அவர்களுக்கு ரிம 25.84 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. நான் முன்பு குறிப்பிட்டது போல, விண்ணப்பங்கள் ஜூன் வரை திறந்திருக்கும். வணிகர்கள் தொடர்ந்து பதிவு செய்யலாம்,” என்று அவர் இன்று தனது அதிகாரப்பூர்வ இல்லத்தில் சிலாங்கூர் பரிவுமிக்க ஊக்குவிப்பு 2.0-இன் தற்போதைய செயல்திறன் குறித்து ஒரு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இதனிடையே, அடிப்படை விவசாயத் தொழில் நடத்தி வரும் தகுதியான விவசாயிகள், கால்நடை மற்றும் விவசாயிகளும் 5,000 அடிப்படை உணவுப் பொதிகளைப் பெற்றதாக அமிருடின் தெரிவித்தார். மார்ச் 27 முதல் 135 விவசாயிகள் கலந்து கொண்ட சிலாங்கூர் வேளாண்மை சந்தையில் ரிம 7.37 மில்லியன் விற்பனையும் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.