புத்ராஜெயா, மே 30:
சாலைப் போக்குவரத்து இலாகா, ஜேபிஜேவின் கீழ் செயல்படும் வாகனமோட்டும் பயிற்சி மையமும், லைசென்ஸ் தொடர்பான பணிகளும், ஜூன் ஒன்றாம் தேதி முதல் காலை 8 மணியிலிருந்து மாலை 4 மணி வரை மீண்டும் இயங்க அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.
இதன் தொடர்பாக வெளியிடப்பட்டிருக்கும் அனைத்து உத்தரவுகளைப் பின்பற்றுமாறும், தொடுகை இடைவெளி மற்றும் சுகாதாரத்தைக் கடைப்பிடிப்பது போன்ற புதிய இயல்பு முறையை அமல்படுத்துமாறும் தற்காப்பு அமைச்சர் டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் பொது மக்களுக்கு நினைவுறுத்தி இருக்கிறார்.
உடல் உஷ்ணத்தைப் பரிசோதிப்பது, வாகனத்தைப் பயன்படுத்துவதற்கு முன்பும் பின்னரும் அதன் உட்புறமும் வெளியிலும் கிருமிநாசினி தெளிப்பு நடவடிக்கையை மேற்கொள்வது, வாகனத்தின் கொள்ளலவை உறுதிப்படுத்திக் கொள்வது மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட இருக்கை முறைகள் போன்ற சுகாதார அமைச்சும் தேசிய பாதுகாப்பு மன்றமும் நிர்ணயித்திருக்கும் செயல்பாட்டு தர விதிமுறைகளை, ஜேபிஜே பின்பற்றவிருக்கிறது.
சனிக்கிழமை புத்ராஜெயாவில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் இதனைத் தெரிவித்தார்.
மலேசியர்கள், வெளிநாடுகளுக்கு குறிப்பாக கொவிட் 19 நோய்ப் பரவல் அதிகம் இருக்கும் நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை.
மேலும், கொவிட் 19 நோய்ப் பரவுவதற்கான ஆபத்து, அதிகம் இருக்கும் இந்தோனேசியாவில், உயர்க் கல்வியைத் தொடர விரும்பும் மாணவர்களுக்கும் இந்த உத்தரவு பொருந்தும் என்று அவர் தெரிவித்தார்.
— பெர்னாமா