புத்ராஜெயா, ஜூன் 3:
பிகேபிபி காலக்கட்டத்தில் திருமணப் பதிவு தொடர்பாக மாநிலம் கடந்து செல்லும் இஸ்லாம் அல்லாதோருக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக தற்காப்பு அமைச்சர் டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறியிருக்கிறார்.
இருப்பினும், அத்திருமணப் பதிவில் சம்பந்தப்பட்ட, மணமகன், மணமகள், இரண்டு சாட்சிகள் ஆகிய நால்வர் மட்டுமே கலந்துக் கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.
இதனிடையே, நேற்றிரவு அனுமதியின்றி மாநிலம் கடந்து செல்ல முயற்சித்த 93 வாகனங்கள் திரும்ப அனுப்பப்பட்டுள்ளன.
மாநிலம் கடந்து செல்ல முயற்சித்த மாநிலங்களில் பஹாங், மலாக்கா மற்றும் சிலாங்கூர் ஆகிய மாநிலங்களே அதிக எண்ணிக்கையைப் பதிவுச் செய்துள்ளதாக மூத்த அமைச்சருமான டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி கூறியிருக்கிறார்.
பிகேபிபியை மீறிய குற்றத்திற்காக அரச மலேசிய போலீஸ் படை நேற்று 56 பேர் கைது செய்தது. அதில் 46 பேர் தடுத்து வைக்கப்பட்ட நிலையில் 10 பேருக்கு ஜாமின் வழங்கப்பட்டிருக்கிறது என்று அவர் தெரிவித்தார்.
மேலும், 88 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.
மற்றொரு நிலவரத்தில், நாடகம் மற்றும் படப்பிடிப்புக் குழுவைச் சேர்ந்தவர்களுக்கும் நடிகர்களுக்கும் கொவிட் 19 சுகாதார பரிசோதனை மேற்கொள்ளப்படுவது கட்டாயமில்லை என்று டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி தெரிவித்தார்.
— பெர்னாமா