ஷா ஆலம், ஜூன் 10:
நாடு முழுவதும் 99 டெங்கி நோய் கண்ட ஆபத்தான பகுதிகளில் சிலாங்கூரில் 61 பகுதிகள் ஆகும். இதில் உலு சிலாங்கூர் மாவட்டம் முன்னணியில் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. பப்ளிக் ஹெல்த் மலேசியாவின் கூற்றுப்படி, உலு சிலாங்கூரில் உள்ள தெராத்தாய் அடுக்குமாடி குடியிருப்பில் 131 சம்பவங்களும், உலு லங்காட் பண்டார் புக்கிட் மஹ்கோட்டா வீடமைப்பு பகுதியில் 56 சம்பவங்களும், செப்பாங் சைபீரியா ஸ்மார்ட் ஹோம் (54), பெட்டாலிங் மென்டாரி கோர்ட் (39) ஆகியவையும் பதிவாகியுள்ளன.
உலு லங்காட்டில் உள்ள தாமான் எஹ்சன் ட்ரீம் ஒன்பது சம்பவங்கள், ஸ்ரீ கெம்பங்கன் தொழில்துறை பகுதி (7) மற்றும் உலு சிலாங்கூர் மாவார் குடியிருப்புகள் (10) ஆகியவற்றுடன் புதியசம்பவங்கள் கண்டறியப்பட்டுள்ளன. “கோவிட் -19 சம்பவங்கள் நேற்று ஒரு இலக்கமாகக் குறைந்துவிட்டதை நாங்கள் கண்டபோது, டெங்கி நோயாளிகள் எண்ணிக்கை அதிகமாக உயர்ந்துள்ளது. வீடு மற்றும் பணியிடத்தைச் சுற்றியுள்ள சுற்றுச்சூழலை தொடர்ந்து கண்காணிக்கவும், ஏடிஸ் கொசுகாகளின் இனப்பெருக்கம் செய்யும் பகுதிகளை அழிக்கவும், அதைத் தடுப்பதற்காக அதிகாரிகள் மற்றும் சமூகத் தலைவர்களிடம் தெரிவிக்கவும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது” என்று சுகாதார அமைச்சின் (MOH) இணையச் செய்தியில் அறிவுறுத்தப்பட்டது.
வாரந்தோறும் எட்டு சதவீதம் தொடர்ந்து அதிகரித்ததைத் தொடர்ந்து ஜூன் முதல் செப்டம்பர் வரை இரண்டாவது டெங்கி காய்ச்சல் அலையை சுகாதார அமைச்சு எதிர்பார்க்கிறது. ஜனவரி முதல் ஜூன் 6 வரை மொத்தம் 48,584 டெங்கி நோயாளிகளும் 84 இறப்புகளும் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.