ஷா ஆலம், ஜூன் 11:
சிலாங்கூரில் பொருளாதார, சமூக மற்றும் பொழுதுபோக்கு துறைகளை உள்ளடக்கிய எந்தவொரு நடவடிக்கையும் தேசிய பாதுகாப்புமன்றம் (எம்கேஎன்) கோடிட்டுக் காட்டிய சீரான செயலாக்க நடைமுறைகளுக்கு (எஸ்ஓபி) பின்பற்ற வேண்டும் என சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார். வளாகத்திற்குள் நுழைவதற்கு முன் செலாங்கா செயலியின் க்யூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்வது, முகமூடி அணிவது மற்றும் சுகாதாரம் பேணுதல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார்.
” மாநில அரசு இதில் மிகக் கண்டிப்பாக உள்ளது. எந்தவொரு கட்டளையையும் அல்லது நடைமுறைகளை பின்பற்றாத வணிகத் தளங்களை மூடுவதற்கு மாநில அரசாங்கம் தயங்குவதில்லை. விதிக்கப்படும் உத்தரவுக்கு இணங்கத் தவறினால் கடுமையான நடவடிக்கையை எதிர் நோக்க நேரிடும்,” என்று டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
காலை சந்தைகள், திறந்த வெளிச் சந்தைகள், இரவு சந்தைகள் மற்றும் பஸாரியா ஆகியவை ஜூன் 15 முதல் சீரான செயலாக்க நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று நினைவூட்டினார். அந்தந்த ஊராட்சி மன்றங்கள் மூலம் இந்த நடவடிக்கைகள் ஒருங்கிணைக்கப் படுகிறது. இதற்கிடையில், மூன்று பேருக்கு மேல் இசை மற்றும் கலை வகுப்புகள் மற்றும் குழுவாக மலை ஏறும் நடவடிக்கைகளை திறக்க அனுமதித்ததாக அமிருடின் ஷாரி கூறினார். மீட்பு நிலை நடமாடும் கட்டுப்பாட்டு ஆணை நேற்று முதல் ஆகஸ்ட் 31 வரை நடைமுறைக்கு வந்தது, இதில் பொதுமக்களுக்கு அதிக தளர்வுகளை அரசாங்கம் வழங்கியது குறிப்பிடத்தக்கது.