ஷா ஆலம், ஜூன் 12:
சிலாங்கூர் மாநில அரசாங்கம் அடுத்த நியமனங்களில் அதிகமான பெண்களுக்கு கிராமத்து தலைவர்களாக பதவி வகிக்க வாய்ப்பு அளிக்கும் என புறநகர் மேம்பாட்டு ஆட்சிக்குழு உறுப்பினர் ரோஸ்ஸியா இஸ்மாயில் கூறினார். தற்போது 371 பாரம்பரிய கிராமத்து தலைவர்களில் ஐந்து பேர்கள் மட்டுமே மகளிர் ஆவர் என்றும் இதுவே மலேசியாவில் அதிக எண்ணிக்கை என்று பெருமிதம் கொண்டார் அவர்.
” இது மட்டுமின்றி, சிலாங்கூர் மாநிலத்தில் மகளிர் பல்வேறு பதவிகளை வகித்து வருகின்றனர். கிராம நிர்வாகத்தில் செயலாளர்களாகவும் அல்லது கிராம நிர்வாக மன்றத்தில் செயலவை உறுப்பினர்களாகவும் தொடர்ந்து நியமனம் பெற்றுள்ளனர். எதிர் வரும் காலங்களில் 30% கிராமத்து தலைவர்களில் மகளிர் இடம் பெறுவார்கள்,” என்று சிலாங்கூர் இன்றுக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு ரோஸ்ஸியா இஸ்மாயில் கூறினார். இது சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி, கிராமத்து தலைவர்களின் அர்ப்பணிப்பை மதித்து வழங்கிய பரிசு என்றால் அது மிகையாகாது.
இதனிடையே, மொத்தம் 496 கிராமத்து தலைவர்கள் மற்றும் இந்திய சமுதாய தலைவர்கள் குழு ரீதியிலான காப்புறுதி திட்டத்தின் மூலம் பயனடைவார்கள் என்றும் இது இந்த மாதம் தொடங்கி நடப்பில் இருக்கும் என அவர் மேலும் தெரிவித்தார். தாக்காஃபூல் காப்புறுதி திட்டம் ரிம 15,000 மதிப்பிலான இதில் இறப்பு நிதியும் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.