ஷா ஆலம், ஜூலை 13:
சிலாங்கூர் மாநில அரசாங்கம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 48,000 இடாமான் வீடுகளை கட்ட இலக்கு கொண்டுள்ளதாக சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார். மொத்தம் ரிம 12 பில்லியன் மதிப்பிலான வீடமைப்பு திட்டங்கள் இதில் அடங்கும் என்றார் அவர். இந்த வீடமைப்பு திட்டங்களினால் பொருளாதார சுழற்சி மேலும் திறம்படுத்தப் முடியும் என்றும் பல்வேறு வணிக நடவடிக்கைகள் மீட்சி பெறும் அமிருடின் சுட்டிக் காட்டினார்.
” இடாமான் வீடமைப்பு திட்டங்கள் பி40 மற்றும் எம்40 வர்கத்தினருக்கு வீடுகள் பிரச்சினைகளை தீர்க்க வழி வகுப்பது மட்டுமின்றி பொருளாதாரத்தை மேம்படுத்துகிறது. உள்நாட்டு மக்களுக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கிறது,” என்று சிலாங்கூர் மாநில சட்டமன்றத்தில் மூன்றாவது பொருளாதார ஊக்குவிப்பு திட்டத்தை இன்று தாக்கல் செய்த போது அமிருடின் ஷாரி இவ்வாறு பேசினார்.
சிலாங்கூர் மந்திரி பெசார் பெறுநிறுவனத்தின் (எம்பிஐ) கீழ் கட்டப்படும் இடாமான் வீடுகள் மாநில அரசாங்கத்தின் ‘ஒரு குடும்பம் ஒரு வீடு’ என்ற சுலோகத்தின் பிரதிபலிப்பதாக இருக்கிறது என்று அவர் மேலும் தெரிவித்தார். இந்த வீடுகள் 1,000 சதுர அடிக்கு உட்பட்டது மட்டுமின்றி மூன்று அறைகள், இரண்டு கழிவறைகள் மற்றும் இரண்டு வாகன நிறுத்துமிடங்கள் கொண்டது ஆகும். ரிம 250,000 விலை மதிப்பிலான வீட்டில் தொலைக்காட்சி பெட்டி, குளிர் சாதன பெட்டி, தொலைக்காட்சி கெபினேட், சமையல் அறை கெபினேட், குளிர் சாதன வசதியுடன் அறை மற்றும் குளியல் அறை நீர் கொதிகலன் ஆகிய வசதியுடன் கொண்டது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஏப்ரல் மாதத்தில் அதிகாரப் பூர்வமாக தொடங்கப்பட்ட இடாமான் வீடமைப்பு திட்டங்கள் காஜாங், பாங்கி, அம்பாங், ஷா ஆலம், சைபர்ஜெயா, டெங்கில், செத்தியா அலாம், கிள்ளான், பண்டார் சவுஜான புத்ரா, பண்டார் சாலாக் திங்கி மற்றும் கோலா லங்காட் உத்தாரா ஆகிய இடங்களில் கட்டப்பட்டு வருகிறது.